சூரத்: இந்தியாவின் வைரத் தொழிலுக்குத் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. இங்கு 35 ஏக்கர் நிலப்பரப்பில், தலா 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த மாபெரும் வைர வளாகத்தின் மொத்தத் தள பரப்பளவு 70 லட்சத்து 10 ஆயிரம் சதுரடி ஆகும். இது வரும் டிசம்பர் 17ஆம் தேதி திறக்கப்படுவதாக கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த வளாகத்தைத் திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த வளாகத்தில் உள்ள 4,700 அலுவலகங்களும் கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்பே வைரத் தொழில் நிறுவனங்களால் வாங்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் 90 விழுக்காட்டு வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுவதாக கூறப்படுகிறது. வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல், வடிவமைத்தல் மற்றும் விற்பனையில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து செயல்படும் விதமாக, ‘சூரத் வைர பங்குச்சந்தை’ என்ற மாபெரும் வைர அலுவலக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த கட்டடக் கலை நிறுவனமான மார்போ ஜெனிசிஸ் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் இந்தக் கட்டடத்தை கட்டி முடித்துள்ளது. இதற்கான மொத்த பட்ஜெட் ரூ.3 ஆயிரம் கோடி ஆகும்.