புதுடில்லி: அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 67வது நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு புதன்கிழமை இந்தியத் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
“இது உச்ச நீதிமன்றத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். டிசம்பர் 6 தேசத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்கது. இப்போது உச்ச நீதிமன்றம் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிலையை நிறுவுவதன் மூலம் இந்த வரலாற்றின் ஒரு பகுதியாகிறது,” என்று நீதிபதி சந்திரசூட் கூறினார்.
அம்பேத்கரின் வாழ்வியல் கருத்துகளையும் கொள்கைகளையும் இளைஞர்கள், குழந்தைகள், முதியோர்கள் என அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்தச் சட்ட கருத்தியல் என்பது நீதிபதிகள், வழக்குரைஞர்களுக்கானது மட்டுமல்ல. அனைத்து தரப்பு மக்களுக்குமானது என்று அந்நிகழ்ச்சியில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
அம்பேத்கர் 75 ஆண்டுகளுக்கு முன்பு வகுத்த அடிப்படைக் கோட்பாடுகளை நீதித்துறை பின்பற்றி வருகிறது. இந்த ஆண்டு, உச்ச நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் பி.ஆர்.அம் பேத்கரின் சிலை திறக்கப் பட்டது. அதன்மூலம் அவர் நம்முடன் இருப்பதாக உணர்த்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 67வது நினைவு தினம் புதன்கிழமை (6.12.2023) கடைப்பிடிக்கப்பட்டது.
முன்னதாக அரசியலமைப்பு தினத்தையொட்டி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 7 அடி உயர சிலையை நவம்பர் 26ம் தேதி இந்திய அதிபர் திரவுபதி முர்மு திறந்து வைத்தார்.

