கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனத்திற்கு கூட்டத்தில் காத்திருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி சனிக்கிழமை மரணமடைந்தார்.
இவருடைய மரணத்திற்கு இதய நோய் காரணம் என்று கூறப்படுகிறது.
சிறுமி மூன்று வயதிலிருந்தே இதய நோயுடன் போராடி வந்துள்ளார் என்று தெரியவருகிறது.
இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி அந்தச் சிறுமி மயக்கமடைந்துள்ளார் என்றும் அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என்று கூறினர்.
கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதாகக் கூறப்படுகிறது.
இதனால், சில பக்தர்கள் தரிசனத்திற்காக 18 மணிநேரம் காத்திருக்க வேண்டியதாக தெரியவருகிறது.
இதனால் விரக்தியடைந்த பல பக்தர்கள் வரிசை பிடித்து நிற்பதற்கு பதில் முண்டியடித்துக் கொண்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

