புதுடெல்லி: பிரான்சில் உள்ள திருவள்ளுவர் சிலையின் புகைப்படத்தைத் தனது எக்ஸ் ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஞானம், அறிவின் அடையாளமாக உலக மக்களின் மனங்களில் திருவள்ளுவர் உயர்ந்து நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் செர்ஜி நகரில், பார்க் பிரான்ஸ்வா மித்தேரான் என்ற இடத்தில் வெண்கலத்தில் திருவள்ளுவரின் முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. பிரான்ஸ் வொரெயால் தமிழ்க் கலாசார மன்றம் சார்பில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலையை புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். திறப்பு விழாவில் பிரான்ஸ் நாட்டுக்கான இந்தியத் தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், பிரான்சில் உள்ள திருவள்ளுவர் சிலையின் புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “பிரான்சின் செர்ஜியில் உள்ள திருவள்ளுவர் சிலை நமது கலாசாரப் பிணைப்புகளுக்கான அழகான ஒரு சான்றாகும்.
“திருவள்ளுவர் ஞானம், அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார். அவரது எழுத்துகள் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களை ஊக்குவிக்கின்றன,” என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் பிரான்சுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பாரிஸ் நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றியபோது, “உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் மிகப் பழமையான மொழி இந்திய மொழி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.