புதுடெல்லி: வாராக்கடன் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள விளக்கம் தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.
மேலும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர் களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நிதி அமைச்சின் செயல்பாடுகளை சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
“கடந்த ஒன்பது ஆண்டு களில் வாராக்கடன் ரூ. 10.42 லட்சம் கோடி. ஆனால் இதே காலத்தில் வசூலான வாராக்கடன் ரூ. 1.61 லட்சம் கோடி என மத்திய அரசு கூறியுள்ளது.
“இதுதான் நிதியமைச்சரின் பதில் என்றால், நமக்கு எழும் கேள்வி இதுதான். வசூலுக்கும் வாராக்கடனுக்கும் இடையே இவ்வளவு வித்தியாசம் உள்ளதே. இதற்குப் பெயர் என்ன? வரும் ஆனா வராது என்றால் அதற்கு பெயர் என்ன?” என சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.
எப்போது வாராக்கடன் பற்றி பேசினாலும் நீண்ட விளக்கத்தை அளிப்பது நிதியமைச்சரின் வழக்கம் என்று குறிப்பிட்ட அவர், வாராக்கடன்கள் அனைத்தும் வசூலிக்கப்பட்டுவிடும் என்ற எண்ணத்தை நிதியமைச்சர் உருவாக்குவார் என்றார்.
“பொருளியல் குறித்து மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்று மட்டம் தட்டுவதுபோல் பேசும் நிதியமைச்சர், நான் எழுப்பிய கேள்விகளுக்கு என்ன பதில் அளிக்கப் போகிறார்,” என்றும் கேட்டார் சு.வெங்கடேசன்.