திருவனந்தபுரம்: கேரள முதல்வரின் தூண்டுதல் காரணமாக தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் குற்றஞ்சாட்டி உள்ளார்.
தம்மை உடல் ரீதியாக காயப்படுத்த முதல்வர் பினராய் விஜயன் திட்டமிட்டு ஆள்களை ஏவி உள்ளதாக அவர் சாடியுள்ளார்.
அண்மையில் புதுடெல்லி செல்வதற்காக திருவனந்தபுரம் அனைத்துலக விமான நிலையத்திற்குச் சென்றபோது ஆளுநரின் காரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணை அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழிமறித்தனர்.
அப்போது ஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டப்பட்டது. இதனால் கோபம் அடைந்த ஆரிஃப் முகம்மது கான் தனது காரில் இருந்து இறங்கி போராட்டக்காரரை ‘கிரிமினல்கள்’ என்று கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர் களிடம் பேசிய அவர், விமான நிலையம் சென்ற போது நிகழ்ந்தது தற்செயலான சம்பவம் அல்ல என்றும் தம்மைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் சாடினார்.
“என்னை நோக்கி கறுப்புக்கொடி காட்டப்பட்டதுடன் காரின் இருபுறங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அரசியலில் நிலவும் கருத்து வேறுபாடு உடல் ரீதியான வன்முறைக்கு வழி வகுக்கக்கூடாது,” என்று ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் தெரிவித்ததாக இந்து தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

