திருவனந்தபுரம்: உலகப் புகழ்பெற்ற சபரிமலைக்கு ஆண்டுதோறும் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி ஐயப்பனை வழிபட வருகை தருகின்றனர்.
அங்கு வரும் பக்தர்களுக்கு மாநில அரசு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கேரள மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் (ஆர்எஸ்பி) தலைவர் என்.கே. பிரேம்சந்திரன் கூறுகையில், “தெய்வ தரிசனத்திற்காக பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ வசதி, குடிநீர், போக்குவரத்து வசதிகள் செய்துதரப்படவில்லை.
“லட்சக் கணக்கானோர் வருகை தரும் சபரிமலையில் 600 காவலர்கள் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அவசர தலையீட்டைக் கோருகிறோம்,” என்று தெரிவித்தார்.