போபால்: இந்தியன் ரயில்வேயின் குளிர் சாதன வசதி கொண்ட விரைவு ரயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக படுக்கை விரிப்புகள், போர்வை, தலையணை உள்ளிட்ட பொருள்கள் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது.
ஆனால், அவற்றை வீடு திரும்பும்போது பயணிகள் எடுத்துச் சென்று விடுவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் இயக்கப்படும் ரயில்களில் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த இரு மாதங்களில் மட்டும் ரூ.4 லட்சம் மதிப்பிலான போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணைகள் திருடப்பட்டுள்ளதாக ரயில்வே காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
சில ரயில்களின் கழிவறைக் குழாய்களும் திருட்டு போயிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
பொதுவாக, தங்களுக்குக் கொடுக்கப்படும் மெத்தை விரிப்பு, போர்வைகளைப் பயன்படுத்தியபின் அப்படியே அவற்றை பயணிகள் விட்டுச்செல்ல வேண்டும். குளிர்சாதனப் பெட்டிகளின் உதவியாளர்கள் அவற்றைச் சேகரித்து, துவைத்து, அடுத்தடுத்து பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்குவது வழக்கம். ஆனால், சில பயணிகள் அந்தத் துணிகளிலும் கைவரிசை காட்டிவிடுகின்றனர்.

