புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறலுக்கு ஒருவகையில் பாதுகாப்பு குறைபாடு என்று கூறப்பட்டாலும் முக்கியமாக நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பு இன்மையும் பணவீக்கமுமே அதன் காரணங்களாக உள்ளன என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தபோது, நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ராகுல், “பாதுகாப்புக் குறைபாடு உள்ளது. ஆனால் இதற்கெல்லாம் மூல காரணம் பணவீக்கமும் வேலையில்லாத் திண்டாட்டமுமே” என்று கூறியுள்ளார். நரேந்திர மோடியின் தவறான கொள்கை காரணமாக நாடு பலவிதமான பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது.
“வேலை இன்மையால் படித்த இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மத்திய அரசு இந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தினால், இளைஞர்கள் எதிர்நோக்கும் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும்,” என்று வலியுறுத்தி உள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்ற அத்துமீறல் அரசியலாக்கப்படுகிறது என்று பாஜக கூறியதை அடுத்து, அதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், ‘‘நாடாளுமன்ற அத்துமீறலை பயங்கரவாதத் தாக்குதல் என உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் டெல்லி காவல்துறைதான் குறிப்பிட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை யாரும் அரசியலாக்கவில்லை. இது பயங்கரவாதத் தாக்குதல் என்றும் நாங்கள் கூறவில்லை. நாடாளுமன்றப் பாதுகாப்பில் குறைபாடு உள்ளது குறித்து எங்கள் கவலையைத் தெரிவித்துள்ளோம் என்றார்.
இதனிடையே, நாடாளுமன்ற அத்துமீறல் ஒரு சிறிய பிரச்சினை. அந்தப் பிரச்சினையை அரசியலாக்கி திசை திருப்ப முயற்சி செய்கிறது காங்கிரஸ் என்று கூறியுள்ளார் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளரான கைலாஷ் விஜேவர்கியா.
நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பில் ஆறாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற பாதுகாப்பை ஆய்வு செய்ய உயர் அதிகாரம் கொண்ட குழு அமைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.