புதுடெல்லி: நாடாளுமன்ற அத்துமீறல் ஒரு சிறிய பிரச்சினை. அந்தப் பிரச்சினையை அரசியலாக்கி திசை திருப்ப முயற்சி செய்கிறது காங்கிரஸ் என்று கூறியுள்ளார் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளரான கைலாஷ் விஜேவர்கியா.
அண்மையில் ஜார்க்கண்ட் நாடாளுமன்ற உறுப்பினர் திராஜ் சாஹு என்பரின் வீட்டில் இருந்து கணக்கில் காட்டாமல் மறைத்துவைக்கப்பட்டிருந்த பணம் கட்டுக்கட்டாக அள்ளப்பட்டது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 400 கோடி ரூபாயை வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளது. அது எவ்வளவு பெரிய விஷயம். அதைப் பற்றி காங்கிரஸ்காரர்கள் ஒருவரும் வாயைத் திறக்கவில்லை. அதைவிட்டுவிட்டு நாடாளுமன்ற அத்துமீறல் போன்ற சிறிய பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார் கைலாஷ்.
நாடாளுமன்ற அத்துமீறலைப் பெரிதுபடுத்துவதன் மூலம், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் பெருமளவு பணம் கைப்பற்றப்பட்ட விஷயத்தை பெரிதாக்காமல் பார்த்துக்கொள்கின்றனர் காங்கிரஸ்.
நாடாளுமன்ற அத்துமீறல் பெரிய விஷயமல்ல. அதுகுறித்து விசாரணை முடுக்கிவிடப் பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இருந்தும் நாடாளுமன்றத்தை முடக்கும் வேலையில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர் என்றால் அவர்களின் நோக்கங்கள் சரியில்லை என்று தெரிகிறது என்றார் கைலாஷ்.
வேணுகோபால்
முன்னதாக கடந்த சனிக்கிழமை மூத்த காங்கிரஸ் தலைவர் கேசி வேணுகோபால் கூறுகையில், நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என்று வகைப்படுத்தி டெல்லி காவல்துறையினர் அரசியலாக்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.