9.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் சூரத் வைரத் தொழிற்துறை

2 mins read
2ecfa5f5-3be2-4728-aedc-ae882efb5020
குஜராத்தின் சூரத் நகரில் உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையத்தை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இங்கு 15 மாடிகள் கொண்ட ஒன்பது அடுக்குமாடிக் கட்டடங்களில் 4,500 வைர நிறுவன அலுவலகங்கள் இடம் பெற்றுள்ளன. - படம்: இபிஏ

சூரத்: குஜராத் மாநிலத்தில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையத்தை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

அத்துடன், புதிய விமான நிலைய முனையமும் சூரத் நகரில் திறப்பு விழா கண்டது.

சூரத் நகர் அருகே உள்ளது கஜோத் கிராமம். இங்கு 67 லட்சம் சதுர அடி பரப்பளவில் உலகின் மிகப்பெரிய, நவீன வைர வர்த்தக மையம் திறக்கப்பட்டுள்ளது.

பதினைந்து தளங்களைக் கொண்ட ஒன்பது அடுக்குமாடிக் கட்டடங்களில் 4,500 வைர நிறுவன அலுவலகங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த வர்த்தக மையத் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘‘வைர நகரமான சூரத்தின் பெருமைக்கு புகழ் சேர்க்க மேலும் ஒரு வைரம் சேர்க்கப்பட்டுள்ளது.

“இனி வைரம் பற்றி உலகில் எந்தவொரு மூலையில் யார் பேசினாலும் சூரத் வர்த்தக மையமும் இந்தியாவும் குறிப்பிட்டுப் பேசப்படும்.

“சூரத்தின் வைரத் தொழில்துறை ஏறக்குறைய எட்டு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நிலையில், இந்தப் புதிய வர்த்தக மையத்தின் வழி மேலும் 1.5 லட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்.

“கடந்த பத்து ஆண்டுகளில் பத்தாவது இடத்தில் இருந்த இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளியல் நாடாக இப்போது உயர்ந்துள்ளது.

“அடுத்ததாக, எனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளியல் நாடாக வளர்ச்சி அடையும்,’’ என்றார்.

குறிப்புச் சொற்கள்