ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்றுக: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்து

1 mins read
02d2949d-a9c2-49fc-84c6-5d82c37281b7
பிரதமர் மோடி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: ஒரு சில கட்சிகள் நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி சாடி உள்ளார்.

இது ஆபத்தான போக்கு என்றும் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்ததால் எதிர்க்கட்சிகள் கலக்கத்தில் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

தோல்வி ஏற்படுத்திய விரக்தி காரணமாக நாடாளுமன்றக் கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் சீர்குலைத்து அல்லது முடக்கி வருகின்றன என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்தியில் உள்ள பாஜக அரசைத் தூக்கி எறிவதே இண்டியா கூட்டணியின் குறிக்கோளாக உள்ள நிலையில், நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதே பாஜக அரசாங்கத்தின் குறிக்கோள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

“ஜனநாயகம் மற்றும் ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கை கொண்ட அனைவரும் கூட்டாக இணைந்து நாடாளுமன்றத்தில் அண்மையில் நிகழ்ந்த அத்தமீறலைக் கண்டித்திருக்க வேண்டும்,” என்றும் பிரதமர் மோடி மேலும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
மோடிபோராட்டம்