பெங்களூரு: கர்நாடகாவில் 60 வயதைக் கடந்தவர்களும் இணைநோய் உள்ளவர்களும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், மாநிலத்தில் புதியவகை கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
“தொற்றுப்பரவல் குறித்து ஆலோசனைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. எத்தகையை நடவடிக்கைகள் மூலம் தொற்றுப் பாதிப்பைத் தடுக்க முடியும் என்று விவாதித்து உள்ளோம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட இணைநோய்கள் உள்ளவர்களும் சளி காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு உள்ளவர்களும் முகக்கவசம் அணிய வேண்டும். கூடுதல் வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிக்கப்படும்,” என்றார் அமைச்சர் தினேஷ் குண்டுராவ்.
மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் தொற்றுப் பரவலை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கர்நாடகா, கேரள எல்லை மாவட்டங்களான குடகு, மங்களூரு, சாமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே கேரளாவில் கொரோனா தொற்றுப் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது.
இதையடுத்து அங்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஒரு மாதத்தில் கேரளாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33ல் இருந்து 768ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து அங்கு புதுக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அம்மாநில அரசு சுகாதார நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.