லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் லக்னோ வட்டாரத்தில் மனைவியை 18 முறை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் உடல் இயக்க சிகிச்சை நிபுணராக பணிபுரிந்தவர் 38 வயது ஆனந்தேஷ்வர் அக்ரஹாரி. அவருடைய மனைவி சந்தியா. அவர்கள் இருவரும் இரண்டு மகன்களுடன் ரோஷன் நகரில் வசித்து வந்தனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.
அவர்கள் இருவருக்கும் திருமணத்திற்குப் புறம்பான உறவு, பணத் தகராறு உள்ளிட்ட பல விஷயங்களில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது என்றும் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி அந்த வாக்குவாதம் வன்முறையாக மாறியது என்றும் அவ்வட்டார துணை ஆணையர் கூறினார்.
மாற்றுத்திறனாளியான மூத்த மகன் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்ட ஆனந்து சமையலறையில் வேலைபார்த்து கொண்டிருந்த மனைவியை அங்கிருந்த கத்தியை எடுத்து 18 முறை குத்தியதாகவும் உடனே வீட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திலேயே சந்தியா ரத்த வெள்ளத்தில் பிணமானார். தன் மகளை ரத்த வெள்ளத்தில் பார்த்த சந்தியாவின் தாயார் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து ஆனந்தை தேடிவந்த நிலையில், லக்னோவின் கிருஷ்ணா நகர்ப் பகுதியில் அவரைக் கைது செய்தனர்.

