சென்னை: ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 6 பேர் கொண்ட கும்பலை பெரியமேடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையின் தரப்பில் கூறப்படுவதாவது: “சென்னை, பூங்கா நகர், வால் டாக்ஸ் சாலை, பிள்ளையார் கோயில்தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(39). ரவுடியான இவர், வழக்கு விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) சென்ட்ரல் அல்லிக்குளம் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் முன்னிலையாகிவிட்டு, அவரது உறவினர் குரு மற்றும் நண்பர் வசந்தகுமார் ஆகியோருடன் ரிப்பன் மாளிகை அருகே வந்தபோது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல், பிரேம்குமாரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது.
“தனிப்படை காவல்துறையினரின் தேடுதல் வேட்டையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த பாலவாக்கத்தைச் சேர்ந்த மனோஜ் என்ற கும்கி (24), மந்தைவெளி அஜய் (20), கே.கே.நகர் துரைமுருகன் (18), அதே பகுதி ரோஹித் (18), எம்ஜிஆர் நகர் சந்தோஷ் (18) ஆகிய 5 பேர் புதன்கிழமை (டிசம்பர் 20) கைது செய்யப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 16 வயது சிறார் ஒருவரும் பிடிபட்டார். இக் கொலைக்கு மூளையாக செயல்பட்ட சிவசங்கர் உள்ளிட்ட 6 பேர் பொன்னேரி நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்துள்ளனர்,” என்றும் காவல்துறை தெரிவித்தது.

