ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் தேர்தலுக்குப் பிறகு ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் அமர்ந்துள்ளது.
இந்த நிலையில் தெலுங்கானா சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கியது.
நிதி நிலைமை குறித்து விவாதம் நடைபெற்ற போது பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, கடந்த 2014ல் தெலுங்கானா மாநிலம் உருவானபோது நிதி நிலைமை மிக நன்றாக இருந்ததாகவும் போதிய நிதியுடன் மாநிலம் பிரிக்கப்பட்டதாகவும் தற்போது தெலுங்கானா மாநிலத்தின் கடன் சுமை ரூ. 6,71,757 கோடியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
“சந்திரசேகர ராவின் முந்தைய ஆட்சியில் மாநிலமே கடனில் மூழ்கிவிட்டது,” என்றார் அவர்.
இதையடுத்து துணை முதல்வர் பட்டி விக்ரமார்க்கா, “கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த நிதி துஷ்பிரயோகம் குறித்து மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறோம்,” என்று கூறினார்.