புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது. கடந்த 11ஆம் தேதி நாட்டில் 938ஆக இருந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 1,970க்கு அதிகரித்துள்ளது எனறு இந்து தமிழ் திசை வெளியிட்ட தகவல் தெரிவித்தது.
சில நாள்களுக்கு முன்பு கேரளாவில் 79 வயது மூதாட்டி ஒருவருக்கு உருமாறிய ஜேஎன்.1 வகை கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வகை கிருமி மகாராஷ்டிராவில் ஒருவரிடமும் கோவாவில் 19 பேரிடமும் கண்டறியப்பட்டது. சிங்கப்பூர் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவுவதற்கு புதிய ஜேஎன்.1 வகை திரிபு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
இது குறித்து பேசிய இந்திய மருத்துவ கழகத்தின் கொரோனா பணிக்குழுவின் துணைத் தலைவர் ராஜீவ் ஜெயதேவன், “ஜேஎன்.1 என்பது மேற்கத்திய நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் புதிய திரிபாகும். இந்த நாடுகளில் உள்ள கழிவுநீர் கண்காணிப்பு அமைப்பு இந்த வகை கிருமியை மிக அதிக அளவில் கண்டறிந்துள்ளது,” என்றார்.
இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சு புதன்கிழமை காலை வெளியிட்ட புள்ளிவிவரப்படி புதிதாக 614 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ஐந்து நாட்களுக்கு முன்னர் பெங்களூருவில் உள்ள சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த 64 வயது முதியவர், மேலும் 76 வயதான முதியவர் ஒருவர் மற்றும் 44 வயதான அரசு ஊழியர் ஒருவர் என மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மூவருக்கும் இதய நோய், சுவாச பிரச்சினை இருந்துள்ளது. இவர்கள் எந்த வகை கிருமியால் பாதிக்கப்பட்டனர் என்று ஆய்வு நடப்பதாக மாநில சுகாதாரத் துறை புதன்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக்மாண்டவியா, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.பீதியடையத் தேவையில்லை. நமது தயார்நிலையில் எவ்வித தளர்வும் இல்லை. பொது சுகாதாரம் என்று வரும்போது எவ்வித அரசியலுக்கும் இடமில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.