‘பீதி வேண்டாம்; எச்சரிக்கை தேவை’

1 mins read
437bce5d-7e9d-412b-b6a1-0b773be89de5
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று மெல்ல பரவுகிறது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: புதிதாகப் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த தொற்றுப்பரவல் குறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் ஜேஎன்.1 என்ற உருமாறிய கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவாவில் 19 பேருக்கும் கேரளா, மகாராஷ்டிராவில் தலா ஒருவருக்கும் இந்த உருமாறிய கொரோனா தொற்றுப் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

ஜேஎன்.1 தொற்றுப் பாதிப்பு கடுமையானது என்றும் அது குறித்த அதிகமான தகவல்கள் இல்லை என்றும் சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

“இப்போது நாம் அனைவரும் அறிந்திருக்கும் சாதாரண தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன்.

“உலக சுகாதார அமைப்பு பாதிப்பின் தாக்கத்தை தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் நினைக்கிறேன். எனினும், மக்கள் தங்கள் பங்குக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்று சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

கேரள மாநிலத்தில் தொற்றுப் பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது.

கர்நாடகாவில் 60 வயதைக் கடந்தவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்