கௌகாத்தி: வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த விலை உயர்ந்த மீன்களை அசாம் மாநில விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அங்குள்ள திப்ருகர் விமான நிலையத்தில் இருந்து கோல்கத்தாவுக்கு அரிய வகையைச் சேர்ந்த ஐநூறு சன்னா பார்கா மீன்கள் கடத்தப்பட இருந்தன.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதன் சர்கார், ஜிதேன் சர்கார் ஆகிய இருவரும் அந்த மீன்களுடன் கோல்கத்தாவுக்குச் செல்லவிருந்த விமானத்தில் ஏற முற்பட்டபோது, அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
விசாரணையில், இருவரும் அந்த அரிய மீன்களை கிலோவுக்கு ரூ.400 வீதம் கொடுத்து அசாம் மாநில மீனவர்களிடம் இருந்து வாங்கியது தெரிய வந்தது.
இந்த மீன்கள் இந்தியச் சந்தையில் ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.
மொத்தமாக கொள்முதல் செய்த இந்த மீன்களை மலேசியா, இந்தோனீசியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குக் கடத்த கைதான இருவரும் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர்கள் கடத்தவிருந்த மீன்களின் மதிப்பு ஏறக்குறைய 4.5 கோடி ரூபாய் இருக்கும் என்றும் அசாமில் கடத்தலுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்ட ஆக அதிக மதிப்புள்ள மீன்கள் இவைதான் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சன்னா பார்கா மீன்களுக்கு தென் கிழக்கு ஆசிய சந்தையில் நல்ல மவுசு இருக்கிறது.
இவை இந்தியாவின் அசாம் மாநிலத்திலும் பங்ளாதேஷிலும் அதிக அளவில் கிடைக்கின்றன.