ஸ்ரீநகர்: காஷ்மீரில் பனிப்பொழிவு உறைநிலையைத் தாண்டி விட்டதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க் உள்ளிட்ட சில இடங்கள் மற்றும் காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள சோபியன் மாவட்டத்திலும் பனிப்பொழிவு அதிகமாகப் பதிவாகியுள்ளது.
இருப்பினும் டிச.27 வரை வானிலை நிலவரத்தில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேவேளையில் மேகமூட்டமாக காணப்பட்ட வெள்ளிக்கிழமை இரவில் பல இடங்களில் உறைநிலையைத் தாண்டிய வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஸ்ரீநகரில் வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியசில் இருந்து மைனஸ் 3.3 டிகிரிக்கு குறைந்தது. சில இடங்களில் மைனஸ் 4.4 டிகிரியும் பதிவானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. குல்மார்க்கில் மைனஸ் 1.5 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது.
கடுமையான பனிப் பொழிவால் தண்ணீர் விநியோகக் குழாய்கள் உறைந்து போய் விட்டன. ஏரிகள் உள்பட நீர்நிலைகளும் உறைந்து காணப்படுகின்றன. அதனால் அங்கு தண்ணீர், மின்சார விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குளிர் மற்றும் வெப்பநிலை மாற்றத்தால் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் சுவாசக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.