மைசூர்: கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கர்நாடக அரசு, பள்ளி, கல்லூரிகளில் மத அடையாள ஆடைகளை அணிந்து வரக்கூடாது என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாள ஆடை அணியக் கூடாது என அரசு உத்தரவிட்டது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது.
இதனை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த 5 பேர் அடங்கிய நீதிபதி அமர்வில், 3 நீதிபதிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர்.
மேலும் 2 நீதிபதிகள் மாணவிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினர். இதனால் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்ட தடை உறுதி செய்யப்பட்டது. இதனால் தற்போது வரை பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வர தடை உள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மைசூரு அரண்மனை திடலில் நடைபெற்ற மலர் கண்காட்சியை கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தொடங்கிவைத்தார்.
அப்போது பேசிய அவர் “என்ன உடை அணிய வேண்டும் என்பதும், என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதும் தனிமனித உரிமை. அதற்கு கட்டுப்பாடு விதிக்க கூடாது. ஆடை அணிவதன் அடிப்படையில் மக்களை வேறுபடுத்தி பிரித்துப் பார்க்க கூடாது,”
“எனவே ஹிஜாப் தடையை காங்கிரஸ் அரசு மீட்டுக்கொள்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும். என்றார் சித்தராமையா

