ஜெய்ப்பூர்: பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒருபோதும் இணைந்திருக்க முடியாது என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் என்பது இந்தியாவின் நீண்ட கால சவாலாக இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் இருந்தே பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி வந்தவர்கள் மூலமாக இந்தியாவில் பயங்கரவாதச் செயல்கள் தொடங்கிவிட்டதாகச் சாடினார்.
“எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான இந்தியாவின் கவலைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறோம். 26/11 தாக்குதல் பயங்கரவாதம் தொடர்பான மக்களின் எண்ணத்தை மாற்றியமைத்தது.
“அச்சமயம் பயங்கரவாதத்தின் உண்மையான தாக்கத்தை மக்கள் கண்டனர். அதுவரை இதுகுறித்து பலர் தெளிவு இல்லாமல் இருந்தனர்,” என்றார் அமைச்சர் ஜெய்சங்கர்.
பயங்கரவாதத்தை எதிர்ப்பதுதான் இந்தியா மேற்கொள்ள வேண்டிய முதல் நடவடிக்கை என்று குறிப்பிட்ட அவர், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.