புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய நிர்வாக அமைப்பு இடைநீக்கம் செய்யப் படுவதாக மத்திய விளையாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
இக்கூட்டமைப்பின் தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 15 நிர்வாகிகள் தேர்வு பெற்றனர்.
இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஜன் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அண்மைய தேர்தலில் அவர் போட்டியிடாவிட்டாலும், அவரது ஆதரவாளர்கள் பலர் பல்வேறு பதவிகளுக்குத் தேர்வு பெற்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
இதேபோல், நட்சத்திர வீரரான வீரேந்தர் சிங்கும் மல்யுத்த விளையாட்டில் ஈடுபடப் போவதில்லை என நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்கும் புதிய நிர்வாக அமைப்பை இடைநீக்கம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய வியைாட்டுத்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை இந்த இடைநீக்கம் தொடரும் என மத்திய விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு மீண்டும் செயல்படுவதற்கு மல்யுத்த வீராங்கனைகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என்று உலக மல்யுத்த கூட்டமைப்பு நேற்று (டிசம்பர் 23) தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
குறித்த நேரத்தில் தேர்தலை நடத்தாததால் 2023 ஆகஸ்ட் மாதம் உலக மல்யுத்த கூட்டமைப்பால் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.