புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 4,170 ஆக அதிகரித்துள்ளது என்று இந்திய சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
கடந்த 2021 ஜனவரியில் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. இரண்டு தவணைகளாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. இருப்பினும் 2021 ஏப்ரலில் 2வது கொரோனா அலை உச்சத்தைத் தொட்டது. உயிரிழப்புகள் அதிகமாகப் பதிவாகின.
அதன் பின்னர் கடந்த 2022 ஜனவரியில் 3வது கொரோனா அலை ஏற்பட்டபோது நாடு முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. உயிரிழப்புகளும் ஏற்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 4,170 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், கர்நாடகாவில் மூன்று உயிரிழப்புகள் பதிவாகியிருப்பதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதோடு நாடு முழுவதும் மொத்தமாக இதுவரை 4,44,72153 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும், இதுவரை 5,33,337 பேர் இறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக இந்தியாவில் திங்கட்கிழமை (டிசம்பர் 25) புதிதாக 628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம், நிதிஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், இந்தியாவில் உள்ள புதிய கொவிட் மாறுபாட்டை உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாகவும், மாநிலங்கள் சோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.