புதுடெல்லி: டெல்லியில் கடும் பனிப்பொழிவு காரணமாக 30 விமானங்கள் தாமதமாக தரையிறக்கப்பட்டன. 5 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.
டெல்லியில் காலை வேளையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், கடந்த 3 நாள்களாக டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதிலும் தரையிறங்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமையன்றும் (டிசம்பர் 26) 30 விமானங்கள் தாமதமாகத் தரையிறக்கப்பட்டன. இது குறித்து டெல்லி விமான நிலைய தகவல் பலகையில், கடும் பனிப்பொழிவு காரணமாக 30 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலை 8.30 மணி முதல் 10.30 மணிக்குள் தரையிறங்க வேண்டிய 5 விமானங்கள் அருகில் உள்ள ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்குத் திருப்பிவிடப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 8 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. 7 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும் ஒரு விமானம் அகமதாபாத்துக்கும் திருப்பிவிடப்பட்டன.
இதனிடையே, 28ஆம் தேதி வரை டெல்லியில் கடும் பனிப்பொழிவு இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை மேலும் சில புள்ளிகள் குறையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி மட்டுமல்லாது, பஞ்சாபின் சில பகுதிகள், ஹரியானா, கிழக்கு உத்தரப்பிரதேசம், மேற்கு மத்தியப் பிரதேசம், ஒடிஷா ஆகிய பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.