சென்னை: எண்ணூரை அடுத்துள்ள பெரியக்குப்பத்தில் கோரமண்டல் இன்டர்நேஷனல் என்ற உர நிறுவனத்தில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் மயக்கம், மூச்சுத் திணறலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அனைத்து வேதி ஆலைகளிலும் தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அதுகுறித்து அவர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்
அதில், “வடசென்னைப் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் போதிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. கோரமண்டல் இண்டர்நேஷனல் நிறுவனத்திலிருந்து வாயுக்கசிவு ஏற்படுவது இது முதல் முறையல்ல என்றும் இதேபோல் பல முறை வாயுக்கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
“மக்களின் குற்றச்சாட்டுகள் உண்மை எனில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அங்குள்ள மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியதோ, அதே பாதிப்பை கோரமண்டல் நிறுவனமும் ஏற்படுத்தியதாகத்தான் கருத வேண்டியிருக்கும்.
“இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், காவல்துறையும் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஆலையை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“எண்ணூர் உள்ளிட்ட வடசென்னைப் பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து வேதி தொழிற்சாலைகளிலும் தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதில் தேர்ச்சி பெறாத ஆலைகளின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
“அதுமட்டுமின்றி, எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் வேதி ஆலைகளாலும், பிற காரணங்களாலும் அப்பகுதியில் நிலம், நீர், காற்று ஆகியவை எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிய சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர்களைக் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும். பாதிப்புகளைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து அந்தக் குழுவிடமிருந்து மூன்று மாதங்களில் பரிந்துரை அறிக்கை பெற்று அதை முழுமையாகச் செயல்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அன்புமணி ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.