ஸ்ரீநகர்: காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில், அது பாலஸ்தீனத்தில் காஸாவுக்கு ஏற்பட்டுள்ள நிலை காஷ்மீருக்கும் ஏற்படலாம் என்று ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா, நண்பர்களை வேண்டுமென்றால் நாம் மாற்றிக் கொள்ளலாம். அண்டை வீட்டாரை ஒருபோதும் மாற்றிக் கொள்ள முடியாது. அவர்களுடன் நாம் நட்புடன் இருந்தால்தான் இருவரும் வளர்ச்சியடையும் போக்கு உருவாகும் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியதாக ஃபரூக் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியும் இது போருக்கான நேரம் இல்லை. பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், பேச்சுவார்த்தைக்கான அறிகுறியே இல்லை.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், என்ன காரணத்தினால் நாம் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருக்கிறோம் என்று தெரியவில்லை. பேச்சுவார்த்தை மூலமாக நாம் ஒரு தீர்வு காணாவிட்டால், இஸ்ரேலின் குண்டு வீச்சுக்கு உள்ளாகி வரும் காசா, பாலஸ்தீனத்தின் நிலையே நமக்கும் ஏற்படும்,” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இருந்து கடந்த ஒருவார காலமாக நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில், பரூக் அப்துல்லா இவ்வாறு தெரிவித்திருப்பது அதிக கவனம் பெறுகிறது.
கடந்த வாரம் புதன்கிழமை பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் அங்கு தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது
மோதல் தொடர்ந்த நிலையில் ராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக வியாழக்கிழமை மாலையில் ஒரு லாரி மற்றும் ஒரு ஜீப்பில் கூடுதல் வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்த வாகனங்கள் மீது ரஜவுரி எல்லையை ஒட்டிய பூஞ்ச் மாவட்டத்தின் தாத்யார் மோர் என்ற இடத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் இந்தத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மூன்று பேரை ராணுவத்தினர் அழைத்துச் சென்ற நிலையில் அவர்கள் வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் இறந்தனர். இதுகுறித்து வதந்திகள் பரப்பப்பட்டதால் பூஞ்ச், ரஜவுரியில் சனிக்கிழமை இணையச் சேவை முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.