போபால்: மத்திய பிரதேச மாநிலத்தின் குனா பகுதியில் கனரக வாகனம் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் உயிர் இழந்தனர். காயமடைந்த 17 பேர் அருகேயுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தின் போது கனரக வாகனம் தீப்பிடித்து எரிந்தது, பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தருண் ரதி தெரிவித்துள்ளார் .
தீயில் சிக்கிய உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டு விட்டன. அடையாளம் தெரியாமல் கருகிப் போயிருக்கும் உடல்களை அடையாளம் காண்பதற்கு மரபணுச் சோதனை மேற்கொள்ளப்படும் என்று ஆட்சியர் தருண் ரதி தெரிவித்துள்ளார்.
30 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து குனா - ஆரோன் சாலையில் விபத்தில் சிக்கி உள்ளது. உயிரிழந்தவர்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு 50,000 வழங்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாகத் தெரிகிறது.