டோஹா: கத்தாரில் மரண தண்டனையை எதிர்நோக்கிய இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் எட்டு பேரின் தண்டனையை கத்தார் நீதிமன்றம் குறைத்து உள்ளது. தண்டனை விவரம் இன்னும் வெளியாகவில்லை. சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேர், இஸ்ரேலுக்கு ஆதரவாக கத்தாரில் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் இவர்கள் எட்டு பேரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களின் சார்பாக இந்தியா பலமுறை செய்த பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த வழக்கில் கத்தார் நீதிமன்றம், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், மரண தண்டனையை எதிர்நோக்கிய இந்திய அதிகாரிகள் சார்பாக கத்தார் நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரித்த கத்தார் நீதிமன்றம், எட்டு பேரின் மரண தண்டனையை குறைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.