புதுடெல்லி: டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் அப்பகுதிகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள இந்திராகாந்தி அனைத்துலக விமான நிலையம் அருகே மோசமான வானிலை, பனிமூட்டம் நிலவுவதால் 80க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் தாமதமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
விமானச் சேவையில் ஏற்பட்ட தாமதத்தால் பல நூறுக்கும் மேற்பட்ட பயணிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். சனிக்கிழமை காலையும் நிலைமை சீராகாமல் இருந்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டன.
டெல்லியில் வெள்ளி, சனிக்கிழமைகளில் பனிமூட்டம் காரணமாக பார்க்கும் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
“பஞ்சாப், டெல்லி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் ஜனவரி 2ஆம் தேதி வரை பனிமூட்டம் தொடரும். புத்தாண்டுக்கு முந்தைய இரவு வரை இந்தப் பகுதிகளில் பனிமூட்டம் மோசமாக இருக்கும்,” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை, 7 டிகிரி செல்சியஸ் முதல் 11 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.
பீகார், சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட் மாநிலங்களில் 12 டிகிரி செல்சியஸ் முதல் 14 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்தியாவின் மத்தியப் பகுதிகளில் அடுத்த நான்கு ஐந்து நாட்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை மேம்படும், நாட்டின் மற்ற எந்தப் பகுதிகளிலும் மாற்றம் இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களில் பனிப்பொழிவும் லேசான மழைப்பொழிவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளில் ஜனவரி 2ஆம் தேதி வரை மழைப்பொழிவு இருக்கும்” என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.