மும்பை: உணவியல் வல்லுநரான குஷ்பு குப்தா, டிசம்பர் 29ஆம் தேதி காலை, புதுடெல்லியிலிருந்து மும்பை செல்ல இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தார்.
பயணத்தின்போது காய்கறி ‘சாண்ட்விச்’ வேண்டும் எனக் குறிப்பிட்டு முன்னரே அதற்கான கட்டணத்தையும் அவர் செலுத்தியிருந்தார்.
உரிய நேரத்தில் விமானச் சிப்பந்தி உணவைப் பரிமாறியதாகக் கூறிய குஷ்பு, அதை உண்ணத் தொடங்கியதும் உள்ளே உயிருடன் நெளிந்த புழுவைக் கண்டு அதிர்ந்தார்.
மற்ற பயணிகளுக்கு இதுபற்றித் தெரிவித்தால் அவர்கள் ‘சாண்ட்விச்’சை உண்ணலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கக்கூடும் என்று விமானச் சிப்பந்தியிடம் கூறினார் குஷ்பு.
“ஆனால் அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து ‘சாண்ட்விச்’களைப் பயணிகளுக்குப் பரிமாறினார். குழந்தைகள், முதியவர்கள் எனப் பல தரப்பினர் விமானத்தில் இருந்தனர். யாருக்காவது கிருமித் தொற்று ஏற்பட்டால் என்னாவது?,” என்று இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் அவர்.
“உங்களுக்கு வேறொரு உணவைத் தருகிறேன் என்பது மட்டுமே அவரது பதிலாக இருந்தது. உரியவர்களின் கவனத்துக்கு, பிறகு இதைக் கொண்டுசெல்வதாகவும் அவர் கூறினார்,” என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.
“கட்டணத்தைத் திரும்பப் பெறுவதோ, இழப்பீடு பெறுவதோ என் எண்ணம் அன்று. பயணிகளின் பாதுகாப்பில் இண்டிகோ நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்” என்றார் அவர்.
இதுபற்றிக் கருத்துரைத்த இண்டிகோ நிறுவனம், “டெல்லியிலிருந்து மும்பை சென்ற 6இ6107 விமானத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து அறிந்துள்ளோம். உணவு தயாரித்து விநியோகிக்கும் நிறுவனத்திடம் இதுகுறித்துக் கலந்துரையாடுகிறோம். விமானத்தினுள் உயர்தர உணவு, பானங்களைப் பரிமாற கடப்பாடு கொண்டுள்ளோம். அந்தப் பயணியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று தெரிவித்துள்ளது.