புதுடெல்லி: இந்தியாவில் மீண்டும் கொவிட்-19 தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஜேஎன்-1 என்னும் புதிய வகை துணைக் கிருமி வேகமாக பரவி வருகிறது.
அன்றாடம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை இந்திய சுகாதார அமைச்சு வெளியிட்டு வருகிறது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (31 டிசம்பர்) காலையில் அமைச்சு வெளியிட்ட 24 மணிநேர நிலவர அறிக்கையில் ஒரே நாளில் 841 பேருக்கு புதிதாக கொவிட்-19 தொற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 227 நாள்களில் ஒரேநாளில் பதிவான ஆக அதிக எண்ணிக்கை இது. ஆகக் கடைசியாக, 2023 மே 19ஆம் தேதி 865 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டதே அதிகமாகக் கருதப்பட்டது.
கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை சனிக்கிழமை 743 என்றும் வெள்ளிக்கிழமை 797 என்றும் பதிவானது.
புதிய எண்ணிக்கையான 841ஐயும் சேர்த்து கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,309 ஆனது.
கொவிட்-19 தொற்றுக்கு மூவர் உயிரிழந்ததாகவும் ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் பீகாரில் அந்த மரணங்கள் நிகழ்ந்தன.
முன்னதாக, சனிக்கிழமை ஏழு பேர் உயிரிழந்தனர். மூவர் கேரளாவிலும் இருவர் கர்நாடகத்திலும் ஒருவர் தமிழ்நாட்டிலும் ஏழாமவர் சத்தீஷ்கரிலும் தொற்றுக்கு பலியானதாக அமைச்சு விவரம் தெரிவித்தது.
டிசம்பர் 5ஆம் தேதி வரை இந்தியாவில் ஈரிலக்கத்தில் பதிவாகி வந்த கொவிட்-19 தொற்று பாதிப்பு மற்றும் மரண எண்ணிக்கை, ஜேஎன்-1 துணைக் கிருமி உருவெடுத்த பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை 797 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டது.