லக்னோ: லக்னோவின் சௌத்ரி சரண் சிங் அனைத்துலக விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தரையிறங்கிய இரு பயணிகளிடமிருந்து ரூ.2.55 கோடி மதிப்புள்ள ஏறக்குறைய 4 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டதாக ஏஎன்ஐ ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது.
முதல் சம்பவத்தில், உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் பயணி ஒருவர் கொண்டு வந்திருந்த காபி இயந்திரத்தை ஸ்கேன் செய்தபோது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, காபி இயந்திரத்தை சுத்தியலால் உடைத்து, கருவிகள் மூலம் அதனை வெட்டியதில், அதனுள் இருந்த 3.497 கிலோ எடை கொண்ட இரண்டு தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுதொடர்பான காணொளியும் பரவி வருகிறது.
இதேபோன்ற சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் நடந்ததாகவும் அப்போது, சுங்க அதிகாரிகள் காபி இயந்திரத்தில் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், மற்றொரு சம்பவத்தில் ஷார்ஜாவில் இருந்து லக்னோவுக்கு வந்த பயணியின் குடலில் இருந்து 554 கிராம் தங்கம் மீட்கப்பட்டது.
இரு பயணிகளிடமும் கடத்தல் தங்கம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.