புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் இயங்கி வரும் தெஹ்ரீக் இ ஹூரியத் என்ற அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சமூக ஊடகமான எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தெஹ்ரீக் இ ஹூரியத் ஜம்மு காஷ்மீர் அமைப்பு சட்டவிரோதமானது. இந்த அமைப்பு ஜம்மு காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து இஸ்லாமிய ஆட்சியை நிறுவும் வகையில் தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் இந்தியாவுக்கு எதிரான பரப்புரைகளைச் செய்து வருகிறது. நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அமைப்புகளுடன் இந்த அமைப்புக்கு தொடர்பு உள்ளது.
மத்திய அரசு பயங்கரவாதத்தை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. அத்துடன் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளும் முறியடிக்கப்படும்.
தெஹ்ரீக் இ ஹூரியத் ஜம்மு காஷ்மீர் அமைப்பு சையத் அலி ஷா கிலானியால் கடந்த 2004ல் தொடங்கப்பட்டது.
பாகிஸ்தான் ஆதரவாளராகவும், காஷ்மீர் ஜிகாதி குழுக்களின் தலைவராகவும் கருதப்படும் இவர், ஜமாத் இ இஸ்லாமி காஷ்மீர் அமைப்பில் இருந்து விலகியதை அடுத்து, தெஹ்ரீக் இ ஹூரியத் ஜம்மு காஷ்மீர் அமைப்பை தொடங்கினார்.