அகமதாபாத்: குஜராத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்திலுள்ள ரான் கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அச்சிறுமி திங்கள்கிழமை பிற்பகல் கிட்டத்தட்ட 1 மணியளவில் தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார்.
கிட்டத்தட்ட 9 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றிலிருந்து சிறுமி மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்டபோது சிறுமி சுயநினைவின்றி இருந்ததாகவும் முதற்கட்ட சிகிச்சைகள் வழங்கி ஜாம் கம்பாலியா நகரில் உள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறுமியின் உடலைக் கூறாய்வு செய்த மருத்துவர்கள், உயிர்வாயு இல்லாத காரணத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவள் உயிரிழந்ததாகக் கூறினர்.