புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 636 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 2 பேரும், தமிழகத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்
கடந்த மாதத்தில் இருந்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது, குறிப்பாக கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா ஜேஎன்.1 திரிபு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவுடன், அதன் பரவலைத் தடுக்க மாநில மற்றும் மத்திய அரசுகள் இரண்டும் நடவடிக்கைகள் எடுத்துள்ளன. கொரோனா ஜேஎன்.1 திரிபு வைரஸ் தீவிர அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4,565 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இறந்தவர்களின் எண்ணிக்கை 533,366 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 44,476,550 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, வீடு திரும்பியுள்ளனர். மேலும், இந்தியாவில் இதுவரை 220.67 கோடி முறை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும் கேரளாவில் செவ்வாய்க்கிழமை 2 பேரும், தமிழகத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.