புதுடெல்லி: அதானி குழுமம் எதிர்நோக்கும் நிதிமோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்புக் குழு தேவையில்லை. அந்த வழக்கை ‘செபி’ எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்று ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தற்போது இந்த வழக்கை பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரித்து வருகிறது. அதை மாற்றுவதற்கு எந்தவித அடிப்படைக் காரணமும் இல்லை.
எனவே இந்த நிதிமோசடி வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதேபோல், 22 புகார்களில் 20 புகார்களின் விசாரணையை செபி முடித்துவிட்டது. மீதமுள்ளள இரண்டு வழக்குகளின் விசாரணையை செபி 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.
“செபியின் ஒழுங்குமுறை சட்டத்துக்குள் ஒரு குறிப்பிட்ட அளவே உச்ச நீதிமன்றத்தால் தலையிட முடியும். அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதா என்பதை மட்டுமே உச்ச நீதிமன்றத்தால் ஆராய முடியும். ஒழுங்குமுறையை திரும்பப்பெற செபி அமைப்புக்கு உத்தரவிட சரியான காரணங்கள் இல்லை,” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கின் பின்னணி: கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருப்பதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்டது.
பங்குச் சந்தை மதிப்பில் உயர்வைக் காட்டி அதானி குழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றது, பங்குச் சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டது, அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டது என்றெல்லாம் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையின் உண்மைத்தன்மையைக் கண்டறிய உச்ச நீதிமன்றம் முன்னதாக ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழு அதன் ஆய்வு முடிவுகளை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்திடம் அளித்தது. அதன் தொடர்ச்சியாக அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.