புதுடெல்லி: டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் ஆன அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையின் ஆணையை மீண்டும் மூன்றாவது முறையாக புறக்கணித்துள்ளார்.
“அமலாக்கத்துறையின் அந்த ஆணை சட்டவிரோதமானது என்றும் அதனால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையாக மாட்டார். எப்படியாவது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்வது மட்டுமே அதன் நோக்கம்,” என்றும் அக்கட்சி சாடியுள்ளது.
இந்த வழக்கில் அமலாக்கத் துறை அனுப்பியிருக்கும் 3வது சம்மன் இதுவாகும். ஏற்கெனவே கடந்த 2023 நவ.2 மற்றும் டிச.21 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அந்த இரண்டு விசாரணைகளுக்கும் முன்னிலையாகாமல் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தவிர்த்திருந்தார்.
அமலாக்கத் துறையால் முதல் சம்மன் அனுப்பப்பட்டதில் இருந்தே, விசாரணைக்குப் பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்று தீவிரமான ஊகங்கள் நிலவி வருகின்றன. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் பலர் இதனை சுட்டிக்காட்டியே அறிக்கைகளை வெளியிடுகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் காவலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த வழக்கில் கெஜ்ரிவாலிடம் கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ விசாரணை நடத்தி இருந்தது. ஆனால் அவர் மீது குற்றம்சாட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.