புதுடெல்லி: கர்னி சேனா தலைவர் கொலை வழக்குத் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் 31 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.
ராஜஸ்தானில் செயல்பட்டு வரும் ராஷ்ட்ரிய ரஜபுத்திரி கர்னி சேனா பிரிவின் தலைவர் சுக்தேவ். இவர் 2023 டிசம்பர் 5ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் உள்துறை அமைச்சு ஒப்படைத்தது. அதைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் அதிரடிச் சோதனைகளைத் தொடங்கியுள்ளனர்.
இந்த கொலைத் தொடர்பாக டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். முதல்கட்ட விசாரணையில் சுக்தேவை சுட்டுக் கொலை செய்த மர்ம நபர்கள், ஹரியானாவை சேர்ந்த நிதின், ராஜஸ்தானை சேர்ந்த ரோகித் ரத்தோட் என்பது தெரிய வந்தது. இவர்களில் நிதின் என்பவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.
கொலையாளி ரோகித் ரத்தோட் - கர்னி சேனா தலைவர் சுக்தேவ் இடையே ஏற்கெனவே முன்பகை இருந்துள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் ரோகித் ரத்தோட் சிறை செல்வதற்கு சுக்தேவ் காரணமாக இருந்துள்ளார்.
நிதின், ரோகித் ஆகிய இருவருக்கும் தங்குவதற்கு இடம் அளித்த குற்றத்திற்காக ரம்வீர் சிங் என்பவர் டிசம்பர் 9ஆம் தேதி ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் உள்ள விடுதியில் பதுங்கியிருந்த நிதின், ரோகித் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களுக்குத் துணையாக இருந்ததாக உத்தம் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
முழுமையான விசாரணைக்குப் பிறகே கொலைக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.