கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் உள்ள எடப்பள்ளியைச் சேர்ந்தவர் ரவுல் ஜான். அவர் எடப்பள்ளியில் உள்ள அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கல்வியில் சிறந்து விளங்கும் ரவுல் ஜான், எதிர்கால தொழில்நுட்பம் தொடர்பான படிப்புகளில் ஆர்வமாக இருந்தார். இதன் காரணமாக அவர் மரங்களை பயன்படுத்தி ‘மீபோட்’ என்ற பெயரில் ‘ரோபோ’ இயந்திரம் ஒன்றையும் தயாரித்து வைத்துள்ளார்.
பல தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நாம் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அந்த ‘ரோபோ’வை மாணவர் ரவுல்ஜான் உருவாக்கியிருக்கிறார்.
மாணவர் ரவுல்ஜானின் இந்த படைப்பு அவர் தொடங்கிய யூடியூப் சேனல் மூலம் பிரபலமானது. வெளிநாட்டில் உள்ள கல்வித்தளங்கள் ரவுல் ஜானின் திறமையை அங்கீகரித்தது. இதன்மூலம் ரவுல் ஜானை அமெரிக்க மாணவர்கள் பலர் ‘கூகள் மீட்’ மூலம் தொடர்பு கொண்டனர். அதன் மூலம் அமெரிக்க மாணவர்களுக்கு அவர் வகுப்பு எடுத்து வருகிறார்.
ஒவ்வொரு வகுப்பிலும் 40 மாணவர்கள் வரை பங்கேற்று ரவுல் ஜானிடம் பல்வேறு கேள்விகளை கேட்கின்றனர். பெரும்பாலும் 2 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்கள் அவரிடம் யோசனைகளை கேட்கிறார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆளில்லா விமானம் தயாரிப்பதே தனது அடுத்த இலக்கு என்று மாணவர் ரவுல் ஜான் தெரிவித்திருக்கிறார்.