ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் ராவத். அவர் ‘எம்பிஏ’ படிக்க இத்தாலிக்கு சென்றிருந்தார். இந்நிலையில் கடந்த 1ஆம்தேதி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்க ராவத்தின் பெற்றோர் அவரை கைப்பேசி வழி தொடர்புகொண்டனர்.
அப்போது அவர் அழைப்பை ஏற்காததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவர் தங்கும் விடுதியின் உரிமையாளரை கைப்பேசி மூலம் தொடர்புகொண்டனர். அப்போது அந்த விடுதி உரிமையாளர் அளித்த தகவல் ராவத்தின் பெற்றோருக்கு அதிர்ச்சியை அளித்தது.
ராவத் கழிவறை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாகவும் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளதாகவும் தங்கும் விடுதியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மகன் உயிரிழந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அதிர்ச்சியில் மூழ்கினர். ராவத்தின் குடும்பத்தினர் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருமாறு ஜார்கண்ட் மாநிலத்தின் மூத்த அரசு அதிகாரிகளை அணுகியுள்ளனர்.
மாணவர் மரணம் குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும் மாநில உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜார்கண்ட் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இத்தாலியில் இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.