அமராவதி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி அந்தக் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் (64), அயோத்திக்கு பாதயாத்திரையாக செல்கிறார்.
கடவுள் ராமரின் பக்தரான ஸ்ரீனிவாஸ் ஐதராபாத்தில் இருந்து ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத் வழியாக 8,000 கிலோமீட்டர் பாதயாத்திரையாக அயோத்தி செல்கிறார்.
கடவுள் ராமருக்கு காணிக்கையாக தங்க காலணிகளையும் ஸ்ரீனிவாஸ் வழங்கவுள்ளார். அந்த தங்க காலணிகளின் மதிப்பு 65 லட்ச ரூபாய் என்று இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி தனது பாதயாத்திரையை தொடங்கிய ஸ்ரீனிவாஸ், பல்வேறு நகரங்களை கடந்து அயோத்தியை நெருங்கியுள்ளார். ஸ்ரீனிவாஸ் அயோத்தியை அடைய இன்னும் 272 கிலோமீட்டர் தூரம் உள்ளது. அவர் வரும் 16ம் தேதி அயோத்தி சென்றடைவதாகக் கூறப்படுகிறது.
அயோத்தி சென்றடையும் ஸ்ரீனிவாஸ் கடவுள் ராமருக்கு காணிக்கையாக கொண்டுவந்த தங்க காலணிகளை உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது.

