மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிறுவனரான நரேஷ் கோயல் நீதிமன்ற விசாரணையின்போது கண்ணீர்விட்டு சிறையிலேயே இறக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
1992ஆம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமாக உருவான ஜெட் ஏர்வேஸ் கொடி கட்டி பறந்தது.
ஆனால் 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு அது கடும் சரிவை நோக்கிப் பாய்ந்தது.
இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா மற்றும் சில விமான நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் மீது கனரா வங்கியில் ரூ.538 கோடி பண மோசடி செய்தது தொடர்பில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
அந்த வழக்கின் அடிப்படையில் நரேஷ் கோயல் மீது அமலாக்கத்துறை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.848.86 கோடி கடனில் ரூ. 538.62 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாக வங்கி அளித்த புகாரில் அடிப்படையில் அந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி வங்கி மோசடி வழக்கு தொடர்பாக நரேஷ் கோயலை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தற்போது அவர், மும்பை ஆர்தர் சாலை சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே முன்னிலையில் அவர் தனது பிணை மனுவைத் தாக்கல் செய்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த விசாரணைக்காக முன்னிலையான நரேஷ் கோயல் தனிப்பட்ட முறையில் தன்னிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு நீதிபதி சம்மதித்தார்.
நரேஷ் கோயல் கூப்பிய கரங்களுடன் மொத்த உடலும் நடுங்கியபடி தனது உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
தனது மனைவி அனிதா தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.
தனது மகளின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டிருப்பதால், மனைவியை பார்த்துக்கொள்ள முடியவில்லை என்று கண்ணீருடன் அவர் கூறினார்.
“நான் நம்பிக்கை இழந்துவிட்டேன், உயிர் வாழ்வதைவிட சிறையில் இறப்பதே நல்லது. என்னை மருத்துவமனைக்கு அனுப்பாமல் சிறையில் இறக்க அனுமதிக்க வேண்டும்,” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அவரது வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு வரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.