பாட்னா: பீகாரில் காதல் திருமணம் செய்த மகளையும் அவரை மணந்த ஆடவரையும் அவர்களுக்குப் பிறந்த குழந்தையையும் கொலை செய்தவரை காவல்துறை தேடுகிறது.
பகல்பூரில் செவ்வாய்க்கிழமை மாலை இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்தது.
மகள் சாந்தினி குமாரி, 23, அவரது கணவர் சாந்தன் குமார், 40, அவர்களது இரண்டு வயது குழந்தை ரோஷினி குமாரி ஆகியோரை பெண்ணின் தந்தை பப்பு சிங் தமது மகன் தீரஜ் குமார் சிங்குடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு தப்பினார்.
நாவ்தோலியா என்னும் கிராமத்தில் உள்ள தங்களுடைய வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த மூவரையும் வழிமறைத்து, இரும்புக் கம்பியால் அடித்து பின் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
சம்பவ இடத்தில் உயிரிழந்த மூவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்த விசாரணை நடந்து வருவதாக காவல்துறை அதிகாரி ஓம் பிரகாஷ் அருண் தெரிவித்துள்ளார்.
சாந்தினி குமாரியும் சாந்தன் குமாரும் 2021ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்ததாகவும் அதில் பெண்ணின் தந்தைக்கு உடன்பாடு இல்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.