கொப்பல்: கர்நாடக மாநிலத்தில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு இஸ்லாமியக் குடும்பம் ஒன்று அன்னதானம் வழங்கும் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகின்றன.
பிஞ்சாரா சமூகத்தின் மாவட்டத் தலைவரான காஷிம் அலி முடபல்லி, வடக்கு கர்நாடகத்தில் கொப்பல் நகரின் ஜெயநகர் பகுதியில் அமைந்துள்ள தமது வீட்டில் சபரிமலை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
அன்னதானத்திற்குப் பின்னர், ஐயப்ப பக்தர்கள் பஜனைகள் பாடி அவரது வீட்டில் வழிபாடு செய்தனர்.
காஷிம் குடும்பத்தினரும் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்களுடன் இணைந்து பஜனைகள் மற்றும் வழிபாடுகளில் பங்கேற்றனர்.
“எல்லா சமயங்களும் ஒன்றுதான். அவற்றின் அடிப்படைக் கோட்பாட்டை நாம் அறிந்துகொள்ள வேண்டும்,” என்று காஷிம் கூறினார்.
அண்மையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற வடகர்நாடகாவைச் சேர்ந்த ஆறு பக்தர்கள், வனவிலங்கு தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து குடகு மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் அவர்கள் தங்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை இஸ்லாமியர்கள் செய்து கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.