புனே: தற்காப்புக் கலைஞர் சித்து ஷேத்ரி (42 வயது) என்பவர் தொடர்ந்து 55 மணி நேரம் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ளார். பொதுவாக குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடுவோர் அதற்கென இருக்கும் ‘குத்துப் பை’ ஒன்றை வைத்து அதில் இடைவிடாமல் குத்தி கரங்களை வலுப்படுத்துவர்.
சித்து ஷேத்ரி இவ்வாறு பயிற்சி பெறுவதிலேயே சாதனைப் படைக்கத் திட்டமிட்டார்.
அண்மையில் நடைபெற்ற சாதனை நிகழ்வின்போது அவர் தொடர்ந்து 55 மணிநேரம் 15 நிமிடங்கள் குத்துப் பையில் தொடர்ந்து குத்தி கின்னஸ் சாதனை படைத்தார். இதன் மூலம் தன் முந்தைய சாதனையை அவர் முறியடித்தார்.
இந்தச் சாதனை நிகழ்வின்போது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஓய்வெடுக்க அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு முன்பு 2013ஆம் ஆண்டில் ஒரு காலை மட்டும் பயன்படுத்தி மூன்று நிமிடங்களில் 620 முறை குத்துப் பையை உதைத்து (கிக்) சாதனை படைத்திருந்தார் சித்து. அதற்கு முன்னதாக 2011ல் ஒரு நிமிடத்தில் 168 முறை உதைத்து சாதனை படைத்தார்.