புவனேஸ்வர்: ஒடிசாவின் பாரம்பரிய உணவான எறும்புச் சட்னிக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
அங்குள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் சிவப்பு எறும்புகளை அனைத்து இடங்களிலும் காண முடியும்.
மரங்களின் இலைகளில் கூடுகட்டி வாழும் இந்த எறும்புகளைப் பிடித்து சட்னி செய்து சாப்பிடுவது அம்மாநில மக்களின் வழக்கம்.
இந்தச் சட்னியில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, 11 வகையான அமினோ அமிலங்கள் உட்பட, உடல்நலத்திற்குத் தேவையான பல சத்துக்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த எறும்புச் சட்னிக்கு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
இதன் மூலம் எறும்புச் சட்னியின் பயன்கள், சுவை குறித்து உலக மக்கள் அறிந்து கொள்வதற்கு மாநில அரசின் ஆதரவுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஒடிசா அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.