உன்னாவ்: உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் ஷாகஞ்ச் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் மதியம் உணவு வேளையின்போது, திடீரென காளை ஒன்று உள்ளே புகுந்துள்ளது. சற்று நேரம் வாசலின் உட்புறம் நின்றபடி வங்கியில் இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்தது. அந்தக் காளை, நானும் பணம் போட வந்திருக்கிறேன் என்று கூறுவது போன்று நின்றது.
இதனால் வங்கியில் பணம் செலுத்த மற்றும் பிற சேவைகளுக்காக வந்திருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அதனை காணொளியாகவும் பதிவு செய்து கொண்டனர். வங்கிக்கு வெளியே கடும் குளிராக இருந்ததால், அந்தக் காளை வங்கிக்குள் அடைக்கலம் நாடி வந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
அந்தக் காளை, சிறிது நேரத்திற்கு பின்னர் நேராக உள்ளே சென்றது. இதுபற்றிய காணொளி ஒன்று இணையத்தில் பரவலாகி வருகிறது. இதனை மணீஷ் என்பவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அந்தக் காணொளியில், வாடிக்கையாளர்களைப் பின்னால் செல்லும்படி ஒருவர் கூறும் சத்தம் கேட்கிறது. காணொளியின் இறுதியில், வங்கி பாதுகாவலர் ஒரு கழியை எடுத்து வந்து அதனை விரட்டுகிறார். பின்னர் அந்தக் காளை வங்கியிலிருந்து வெளியேறியது.
வங்கியில் கடன் கேட்பதற்காகவோ அல்லது ரூ.2 ஆயிரம் நோட்டை மாற்றுவதற்காகவோ எந்த காரணத்திற்காக அந்தக் காளை வந்ததோ எனத் தெரியவில்லை என்று இணையவாசி ஒருவர் நகைச்சுவையாக தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.

