மும்பை: இந்தியாவின் வர்த்தக மையமான மும்பை நகரின் தெற்குப் பகுதியையும் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுவரும் நவி மும்பை நகரையும் இணைக்கும் 21.8 கிலோமீட்டர் நீளம்கொண்ட கடற்பாலம் ஜனவரி 12ஆம் (வெள்ளிக்கிழமை) தேதியன்று திறக்கப்படவுள்ளது.
அட்டல் பிகாரி வாஜ்பாய் சியூரி-நவ சேவா (அட்டல் சேது) என்றழைக்கப்படும் இப்பாலம், இந்தியாவின் ஆக நீளமான கடற்பாலமாகும்.
தெற்கு மும்பைக்கும் நவி மும்பைக்கும் இடையே பயணம் மேற்கெள்ள இரண்டு மணிநேரம் தேவைப்பட்டது. புதிய பாலத்தால் பயண நேரம் 15லிருந்து 20 நிமிடங்களுக்குக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்டிஹெச்எல் (மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க்) என்றும் அழைக்கப்படும் இந்தப் பாலத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமையன்று திறந்து வைத்தார்.
2 பில்லியன் அமெரிக்க டாலர் (2.6 பில்லியன் வெள்ளி) செலவில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தியா அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு வளர்ச்சிக்கு மெருகூட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதைக் கட்ட சுமார் 20 ஆண்டுகள் ஆயின.
அண்டை நாடான சீனாவுக்கு ஈடுகொடுத்து இந்தியாவை சக்திவாய்ந்த பொருளியல் நாடாக உருவெடுக்க வைக்கும் நோக்குடன் சாலைகள், துறைமுகங்கள், ரயில்வே கட்டமைப்பு ஆகியவற்றைப் புதுப்பிக்க இந்திய அரசாங்கம் பில்லியன் கணக்கில் செலவு செய்து வருகிறது. அந்த வகையில் 2030ஆம் ஆண்டுக்குள் சாலை, நகர ரயில் திட்டங்களுக்கென மும்பை 30 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை செலவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பது போன்றவை அந்நடவடிக்கையின் இலக்கு.