புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கடும் குளிா், அடா்த்தியான மூடுபனி, தெளிவற்ற பார்வைத் திறன் தொடர்ந்து நிலவி வருவதால், டெல்லிக்கு வரவேண்டிய ரயில்களில் ஏறக்குறைய 39 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
அத்துடன், டெல்லியில் வீசும் காற்றின் தரத்திலும் பின்னடைவு தென்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில நாள்களாகவே டெல்லியில் அதிகாலை வேளையில் கடும் குளிருக்கு மத்தியில் அடா்த்தியான மூடுபனி நிலவி வருகிறது.
ஏற்கெனவே, இந்திய வானிலை கண்காணிப்பு மையத்தின் கணிப்பின்படி பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை குளிா் அலை வீசியது. டெல்லியில் பகல் நேரத்திலும் மிதமான மூடுபனி நிலவியது.
இதைத்தொடா்ந்து, ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடும் பனிமூட்டம் காரணமாக வடமாநிலங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப்பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இரு நாள்களுக்கு பனிமூட்டம் நிலவும்; இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கத்தில் அடர் பனி நீடிக்கும்; ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் குளிர் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் 39 பயணிகள் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, டெல்லியில் இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பாலம் வானிலை கண்காணிப்பு நிலையத்தில், மிகவும் அடர்த்தியான மூடுபனி காரணமாக காணும் திறன் பூஜ்ஜியமாக பதிவாகி இருந்தது.
அதே சமயம் சஃப்தர்ஜங் விமான நிலையம் வெள்ளிக்கிழமை காலை அடர்த்தியான மூடுபனி காரணமாக 200 மீட்டராக பதிவாகியிருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.